ஞாயிறு, ஜனவரி 22, 2012

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

தியாகம் குறைந்து அருவருக்கத் தகுந்த சுயநலமும் பேராசையும் நிரம்பிப்போன நம் தேசத்தில்…

தியாகம் குறைந்து அருவருக்கத் தகுந்த சுயநலமும் பேராசையும் நிரம்பிப்போன நம் தேசத்தில்…
விகடன் மேடையில் பொதுமக்களின் கேள்விகளுக்கு மதுரை மாவட்ட ஆட்சியர் சகாயம் அளித்துவரும் பதில்கள் எல்லோருமே கட்டாயம் படிக்க வேண்டியதுவை. இந்தத் தலைமுறை, இனி வரும் தலைமுறை அனைவருக்குமே அவர் ஒரு உதாரண மனிதர். இந்தவாரம் அவர் அளித்துள்ள பதில்களிலிருந்து…
”பொது வாழ்வில் ஊழல் செய்யாமல் வாழ்ந்தால், பிழைக்கத் தெரியாதவன் என்கிறார்களே. தூய்மையுடன் ஒருவரால் வாழ முடியாதா? அப்படி வாழ என்ன செய்ய வேண்டும்?”
”பொது வாழ்வில் ஊழல் செய்யாமல் நேர்மை நெறியோடு இருப்பவர்கள் பைத்தியக்காரர்கள் – பிழைக்கத் தெரியாதவர்கள் என்று ‘பிழைக்கத் தெரிந்தவர்கள்’ பட்டம் சூட்டிப் பரிகாசம் செய்வது உண்டு. நேர்மையை லட்சியமாகக் கொண்டு இருப்பவர்கள் அந்தப் பரிகாசங்களைப் பற்றிக் கவலைப்படாமல் அலட்சியப்படுத்துவதே ஆரோக்கியமானதாகும்.
ஒருவேளை, இந்தப் பிழைக்கத் தெரியாத நேர்மையாளர்களுக்கு வாழ்வும் வளமும் இல்லாமல் போகலாம். ஆனால், வரலாறு உண்டு!
பொது வாழ்வில் தூய்மையாக வாழ முடியும் என்பதற்கு எண்ணற்ற உதாரணங்களைச் சொல்ல முடியும். எங்கள் மதுரைப் பக்கம் வந்தால் மேலூரைத் தாண்டிச் செல்பவர்கள் மேன்மையோடு நிற்கும் ஒரு சிலையைத் தவறாது பார்க்க முடியும். அது பெருமகனார் கக்கனுடையது.
பொது வாழ்வில் நேர்மைக்கு இலக்கணமாகத் திகழ்ந்த அவர், மிகக் கொடூரமான சாதியக் கட்ட மைப்பின் அடித்தளத்தில் இருந்து வந்து கீர்த்தி பெற்றவர். அடக்கப் பட்ட சமூகத்தில் தோன்றிய கக்கனுக் குச் சிறப்பின் அடையாளமாகச் சிலை எழுப்புகிறார்கள் என்றால், அது நேர்மைக்குக் கிட்டிய பரிசு தானே!”
”மதுரையில் யாரேனும் ஒருவருக்குச் சிலை எழுப்ப உங்களுக்கு வாய்ப்பு அளித்தால், யாருக்குச் சிலை எழுப்ப விரும்புவீர்கள்?”
”கர்னல் ஜான் பென்னி குயிக் அவர்களுக்குத்தான்!
பாதையே இல்லாத அடர்ந்த காட்டில், கொடிய மிருகங்களுக்கு இடையேயும் நச்சு அரவங்களுக்கு இடையேயும் அணைகட்டும் பணியை அயராது தொடர்ந்தவன்.
18.06.1890ல் கடுமையான பேய் மழையினால் அணைக்கட்டுப் பகுதியில் அடுக்கி வைக்கப்பட்டு இருந்த ஆயிரக்கணக்கான மணல் மூட்டைகள் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்ட காட்சியைக் கண்டு, கோ வெனக் கண்ணீர்விட்டுக் கதறி அழுதவன்.
1893-ல் இந்தப் பகுதியில் ஏற்பட்ட காலராவினால் நூற்றுக்கணக்கில் உயிர்கள் பலியாகின. அதில் பென்னி குயிக்குடன் பணியாற்றிய 45 ஆங்கில உயர் அதிகாரிகளும் இறந்துவிட்டனர். இறப்பும் இழப்பும் தொடர்ந்து தொல்லை கொடுத்தபோதும், அணை கட்டும் பணியைக் கைவிடாது தொடர்ந்தவன்.
ஆங்கில அரசு, பெரியார் அணைக்கட்டைக் கட்ட முடியாது என்று கைவிட்ட நேரத்திலும், தொடர்ந்து பணி செய்து அணை கட்ட உறுதி கொண்டவன்.
நிதி இல்லாதபோது லண்டனில் உள்ள தன் சொத்து, நகைகளை விற்று நிதி கொண்டுவந்து அணை கட்டி தென் தமிழகத்துக்குப் பாசனம் கொடுத்துப் பசி போக்கியவன்.
இன்று தென் தமிழகத்தில், நாங்கள் பாசனம் பெற்றுப் பசியாறுவது மட்டும் அல்ல, தவித்த வாய்க்குத் தண்ணீர் அருந்துவதும் இந்தத் தவப் புதல்வனின் தியாகத்தால்தான்.
தியாகம் குறைந்து அருவருக்கத் தகுந்த சுய நலமும் பேராசையும் நிரம்பிப்போன நம் தேசத்தில், எங்கிருந்தோ வந்து நமக்கு வாழ்வளித்த இந்தப் புனிதனைப் பெருமைப்படுத்த எங்கள் அளவில் ஏதாவது செய்ய வேண்டும் என்று இரண்டு, மூன்று மாதங்களாக எண்ணி இருந்தோம். இந்த மகத்தான மனித னுக்கு மணி மண்டபம் கட்டப்படும் என்ற மாண்புமிகு முதல்வர் அவர்களின் அறிவிப்பு எங்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி அளிக்கிறது.
இவரது நாட்குறிப்பில் எழுதப்பட்டதாகக் குறிப்பிட்ட வாசகம் என்னைப் பெரிதும் ஈர்த்தது.
‘இப் புவியில் நான் வந்து செல்வது ஒரு முறைதான். எனவே, நான் இங்கே ஒரு நற்செயல் புரிந்திட வேண்டும். இதைத் தள்ளி வைப்பதற்கோ, தவிர்ப்பதற்கோ இடம் இல்லை. ஏனெனில், மீண்டும் ஒரு முறை நான் இப் புவியில் வரப்போவது இல்லை!’
இந்த வாசகம் நமக்கும்  பொருந்தும்தானே!”
நன்றி: விகடன் 
தொடர்புடைய கட்டுரை…
தென் தமிழகத்தின் காவல் தெய்வமான ‘பென்னி குயிக்’!

கருத்துகள் இல்லை: