வியாழன், ஜனவரி 05, 2012

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

அண்ணா.தி.மு.க-வை எம்.ஜி.ஆர்.,ஆரம்பித்த வரலாறு



னைத்திந்திய அண்ணா.தி.மு.க., தன் 40-ஆம் வருட துவக்க விழாவில் நுழையும் நாளான இன்று இந்த இடுகையை எழுதுவதுதான் பொருத்தமாக இருக்கும். நண்பர் செங்கோவியின் வேண்டுகோளை ஏற்று எம்.ஜி.ஆர்., தி.மு.க.,வில் இணைந்தது முதல் வெளியான வரை உள்ள வரலாற்றை முன்பே எழுதியிருந்தேன்..இல்லை...இல்லை...தொகுத்திருந்தேன்.

அதன் தொடர்ச்சியாக அ.தி.மு.க.,வை எம்.ஜி.ஆர்.,ஆரம்பித்தது முதல் ஆட்சியை பிடித்தது வரை உள்ள வரலாற்றை தொகுக்குமாறு கேட்டிருந்தார்.அதன் நீண்ட பதில்கள் தான் இந்த பதிவு.....

டந்த 39 வருடங்களுக்கு முன்பு இதே மாதம், இதே நாளில் அதாவது அக்டோபர்-17, 1972-ஆம் ஆண்டு அண்ணா.தி.மு.க.,வை ஆரம்பித்தார் எம்.ஜி.ஆர்.,(அப்போது கட்சியின் பெயர் அனைத்திந்திய அண்ணா.தி.மு.க.,அல்ல....வெறும் அண்ணா.தி.மு.க.,தான். இந்திராகாந்தி மீதிருந்த பயத்தால் அ.இ.அ.தி.மு.க., என்று கட்சியின் பெயரை மாற்றிக்கொண்டார் எம்.ஜி.ஆர்., அந்த கதை பின்னாளில்...)



எம்.ஜி.ஆரின் விருப்பப்படியே மேலே கருப்பு, கீழே சிவப்பு, நடுவில் அண்ணாவின் உருவமென்று கட்சி கொடியை வடிவமைத்து கொடுத்தார் சினிமா கலை இயக்குனர் அங்கமுத்து. எம்.ஜி.ஆர்., மன்றங்களை அண்ணா.தி.மு.க.,என்று மாற்றிக்கொள்ளுமாறு தன் ரசிகர்களுக்கு கட்டளையிட்டார் எம்.ஜி.ஆர்.., அதன்படி தமிழகத்திலுள்ள அனைத்து எம்.ஜி.ஆர்.,மன்றங்களும் அண்ணா.தி.மு.க., என்று பெயர் மாற்றம் கண்டது. தமிழகத்தில் மட்டுமின்றி பெங்களூர், பம்பாய் முதலிய நகரங்களிலும் இருந்த மன்றங்கள் எல்லாம்அண்ணா தி.மு.க.,கிளைகளாக மாற்றப்பட்டது. 20 ஆயிரம் கிளைகளுடன் அண்ணா.தி.மு.க.,ஆரம்பிக்கப்பட்டதாக அறிவித்தார் எம்.ஜி.ஆர்.




கட்சியின் துவங்கிய போது அண்ணா.தி.மு.க.,வின் சட்டமன்ற பலம் ஒன்றாக இருந்தது. ஆம்...எம்.ஜி.ஆர்.,ஒருவர்தான் எம்.எல்.ஏ.,


அதன் பிறகு சில நாட்களிலேயே
எஸ்.எம். துரைராஜ், குழ. செல்லையா, சௌந்தரபாண்டியன், ஜி.ஆர். எட்மண்ட் முதலிய சட்டமன்ற உறுப்பினர்களும், எம்.பி.யாக இருந்த எஸ்.டி.சோமசுந்தரம்,பாவலர் முத்துசாமி, ராஜ்யசபா எம்.பி.யான கே.ஏ.கிருஷ்ணசாமி ஆகியோரும் சேர்ந்தனர். அதி.மு.க.,வின் அவைத்தலைவராக பாவலர் முத்துசாமியையும், அமைப்பாளராக கே.ஏ.கிருஷ்ணசாமியையும்(கே.ஏ.கே) நியமித்த எம்.ஜி.ஆர்., அண்ணா.தி.மு.க.,வின் அதிகாரப்பூர்வ ஏடாக கே.ஏ.கே.,வின் தென்னகம் ஏடையே தேர்ந்தெடுத்தார்.

அண்ணா.தி.மு.க.,வின் முதல் கூட்டம் சென்னை கடற்கரையில் நடத்தப்பட்டது. அந்த கூட்டத்தில் சி.வி. வேலப்பன். கே.காளிமுத்து, கோவை செழியன், ஜி. விஸ்வநாதன் முதலிய சட்டமன்ற உறுப்பினர்களும் தி.மு.க.,விலிருந்து விலகி அண்ணா.தி.மு.க.வில் இணைந்தனர். அந்த கூட்டத்தில் பேசிய அமைப்பாளர் கே.ஏ.கே.,கட்சி ஆரம்பித்த சில நாட்களுக்குள் அ.தி.மு.க.,விற்கு ஆறாயிரம் புதிய கிளைகள் துவங்கப்பட்டுள்ளதாகவும், 10 லட்சத்திற்கும் அதிகமானோர் உறுப்பினர்களாக இணைண்டிருப்பதாகவும் தெரிவித்தார். மேலும், புரட்சி நடிகர் என்பது கருணாநிதி வழங்கிய பட்டம். அது துரோகி வழங்கிய பட்டம் என்பதால் இனி அது எம்.ஜி.ஆருக்கு தேவையில்லை. இனி அவரை புரட்சித்தலைவர் என்று அழைப்போம் என்றார். அன்றுமுதல் எம்.ஜி.ஆர்., புரட்சித்தலைவரானார்.

தி.மு.க.,விலிருந்து ஈ.வி.கே.சம்பத் விலகி தமிழ் தேசிய காங்கிரசை ஆரம்பித்தபோது, அந்த கட்சியை குட்டி காங்கிரஸ் என்று கிண்டலடித்த தி.மு.கவினர், இப்போது எம்.ஜி.ஆர்., துவங்கிய அண்ணா.தி.மு.க.,வை ஒட்டு காங்கிரஸ் என்று கிண்டல் செய்தனர். அதற்கும் காரணம் இருந்தது. அதாவது எம்.ஜி.ஆர்.,புதிதாக கட்சி ஆரம்பிக்க உதவியதில் முக்கியமானவர் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரும், இந்திரா காந்திக்கே ஆலோசனை சொல்பவருமான மோகன் குமாரமங்கலம். அதனால்தான் ஒட்டு காங்கிரஸ் என்று வர்ணித்தனர் தி.மு.க.,வினர்.

எம்.ஜி.ஆர்.,கணக்கு கேட்டதெல்லாம் ஒரு நாடகம். எம்.ஜி.ஆர்., தி.மு.க.,விலிருந்து கணக்கு தீர்த்துக்கொள்ள விரும்பினாரே தவிர, கணக்குப்பார்க்க விரும்பவில்லை என்று கலைஞர் காட்டமாக விமர்சித்தார்.

. எம்.ஜி.ஆரின் கட்சிக்கு இப்போது இருக்கும் சக்தி ஒரு மாயத்தோற்றம்தான், ஒரு தனிமனிதனின் கவர்ச்சியே  அண்ணா.தி.மு.க.,வின் பலம்.இன்னும் மூன்று, அல்லது நான்கு மாதங்களில் அண்ணா.தி.மு.க.,கரைந்து போய்விடும் என்று விமர்சித்தார் நாவலர்.

அடுத்ததாக அறிஞர் அண்ணாவின் மனைவி, திருமதி ராணி அம்மாள் மூலம் எம்.ஜி.ஆருக்கு ஒரு சோதனை வந்தது. அது......

இன்னும் வ(ள)ரும்....

கருத்துகள் இல்லை: