சனி, டிசம்பர் 24, 2011

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

காக்க..காக்க...நோக்க...நோக்க..(முடிவல்ல ஆரம்பம்)

இந்தியாவில் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை நிறுவியவர் என்றழைக்கப்படும் இராபர்ட் கிளைவ் பற்றி உங்களுக்குத் தெரியுமா?
குறிப்பாக நமது அரசியல்வாதிகள் அத்தனை பேர்களும் மோசம் என்று கருதிக் கொள்பவர்கள் இராபட் கிளைவ்பற்றி தெரிந்து கொள்வது அவசியமானதாகும்.
மேலை நாட்டு வரலாற்றாசிரியர்கள் இவரைப்பற்றி வானாளவ புகழ்ந்து எழுதித் தள்ளியிருக்கிறார்கள். வரலாறு என்பது எப்போதும் ஜெயித்தவர்களை கொண்டாடுவது வாடிக்கை என்றாலும் ஒழிந்திருக்கும் உண்மைகளை ஒரு நாள் வெளியே வரத் தானே செய்யும். .
கிழக்கிந்திய நிறுவனம் தென்னிந்தியாவில் வர்க்கத்தை தொடங்குவதற்காக 17 ஆம் நூற்றாண்டின் மத்தியில் முகலாய சக்ரவர்த்தியின் அனுமதியை பெற்றுருந்தது. அப்போது ஆங்கிலேயர்கள் நிறுவியது தான் தற்போது தமிழ்நாட்டு மாநில முதலமைச்சரின் அலுவலகமாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் புனித ஜார்ஜ் கோட்டை. இந்த கோட்டையை அடிப்படையாகக் கொண்டு இப்போது சென்னை என்றழைக்கப்படும் நகரம் வளர்ச்சியடைந்தது. ஏறக்குறைய இந்த கோட்டையை சுற்றியுள்ள பகுதிகள் மேல்மட்டத்தினர் உலாவும் பகுதியாகவே இருந்தது.
இந்த கோட்டைக்கு சாதாரண எழுத்தராக 1743ம் வருடம் வேலைக்கு வந்தவர் தான் இராபட் கிளைவ். அப்போது இவருடைய வருட சம்பளம் 15 பவுண்ட். ஆனால் இவர் சில வருடங்களிலேயே ஜெனரலாக பிற்காலத்தில் பிரபுவாக (பிலாஸி) தன்னை உயர்த்திக் கொண்டார். இவரைப்பற்றி எழுதிய வரலாற்று ஆசிரியர்கள் மிகச் சிறந்த மதிநுட்பமும், இராணுவ திறமையும் மிக்கவர்.
இதன் காரணமாகவே வாழ்வில் உயர்ந்து பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் இந்தியாவில் ஆழமாக வேறூன்ற உதவினார் என்றே எழுதியிருக்கிறார்கள். ஆனால் இவரிடம் இருந்த ராணுவ பலம் என்பது வெகு சொற்பமே. மேலும் இவருடன் இருந்த முக்கால்வாசிப் பேர்கள் பொறுக்கிகளும், காலிகள், சமூகக் கழிசடைகள் போன்றவர்களும் தான் இருந்தனர்.
முகலாயர்களின் வழிவந்த நிலப்பிரபுத்துவ அரசர்கள் தமக்குள் இடைவிடாது சச்சரவு செய்து கொண்டிருந்தார்கள். தன்னிடம் இருந்த விசுவாசமான போக்கிரிகளை துணை கொண்டு, இராபர்ட் கிளைவ் தந்திரத்தாலும், வஞ்சகம், சூதுக்களாலும் முறியடித்து படிப்பயாக இங்கே சாம்ராஜ்யத்தை விரிவாக்கினார்.
இந்தியாவின் முதல் தலைமுறை பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள், இன்றைய அரசியல்தலைவர்களின் முன்னோடியாக திகழ்ந்தனர். லஞ்சம், ஊழல், பொறாமை, பேராசை, காட்டுமிராண்டித்தனம், எது குறித்தும் அஞ்சாமை போன்றவற்றை குணாதிசியமாக வைத்து இந்தியாவை முடிந்தவரைக்கும் சூறையாடினர்.
இராபட் கிளைவ் கவர்னராக இருந்த போது மற்றொரு காரியத்திலும் கவனமாக இருந்தார். இந்தியாவின் கல்வி முறை, விவசாய முறையையும் நீண்ட ஆராய்ச்சியாக எடுத்துக் கொண்டு முடிவாக இரண்டு தீர்மானத்திற்கு வந்தார். கல்வியை மெக்காலே என்ற புண்ணியவான் எடுத்துக்கொள்ள இவர் விவசாயத்தில் கை வைத்தார்.
கால்நடைகள், மற்றும் பசுக்கள் இந்திய விவசாயத்திற்கு ஆதாரமாக இருப்பதை அழிக்க வேண்டுமென்று கணக்கில் எடுத்துக் கொண்டு 1760 முதல் பசுவதைக்கூடம் நிறுவி நாள்தோறும் கறிக்காக என்ற நோக்கில் 50,000 கால்நடைகளை கொல்லும் புனிதப்பணியை துவங்கினார்.
ஒரு ஆண்டில் மட்டும் கொல்லப்பட்ட கால்நடைகளின் எண்ணிக்கை ஒரு கோடியாகும்.
காரணம் அப்போது இந்தியாவில் இருந்த விவசாயம் நம்முடைய கால்நடைகளின் சாணம், மூத்திரம் இவற்றை அடிப்படையாகக் கொண்டே ஒரு ஏக்கரின் மூலம் 54 குவிண்டால் அரிசியை உற்பத்தி செய்து கொண்டிருந்தது. 1910 வரைக்கும் இரவு பகலாக இந்த பசுவதைக் கூடம் இயங்கிக் கொண்டேயிருந்தது. இன்று வரைக்கும் நவீணமாக்கப்பட்டு இந்த தொழில் நடந்து கொண்டேதான் இருக்கிறது. இதன் பலன் இன்று கோடிக்கணக்கான பணத்தை இறக்குமதி ரசாயன உரத்திற்கு கொண்டு போய் கொட்டி மானிய விலையில் உழவர்களுக்கு கொடுக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம்.
பழங்கதை பேசாதே என்று எளிதாக பலவற்றை புறந்தள்ளி விடுகின்றோம்.
நமது விவசாயத்தில் இருந்த ஏராளமான சாத்தியக்கூறுகள் இன்று இருந்த சுவடே தெரியாத அளவிற்கு காணாமல் போய்விட்டது.
ஒரு சின்ன உதாரணத்தை பார்த்து விடலாம்.
விதை நெல் கோட்டை என்பது கீழ் தஞ்சை மாவட்ட விவசாயிகளுக்கு நன்றாக தெரிந்த வார்த்தை இது. தங்களுக்கு தேவைப்படும் விதை நெல்லை சேகரிக்கும் முறையைத்தான் இப்படி குறிப்பிடுவார்கள். அறுவடை முடிந்ததும் விதை நெல்லை நன்றாக வெயிலில் காய வைத்து சுத்தமான வைக்கோலைக் கொண்டு பிரி (கயிறு போன்று திரித்து) செய்து அதன் மேல் வைக்கோல் பரப்பி அதில் 18 மரக்கால் (55 கிலோ) விதை நெல்லை வைத்து பந்து போல இறுக்கி சுற்றி வைத்து விடுவார்கள். இதற்கு பெயர் தான் விதை நெல் கோட்டை.
இந்த கோட்டையின் மேல் காற்றுப் புகாதவாறு பசு மாட்டு சாணத்தை பூசி நன்றாக காய்ந்த பிறகு தனியாக ஒரு பகுதியில் அடுக்கி வைத்து விடுவார்கள். இது போன்று செய்வதால் உள்ளே உள்ள நெல் ஒரே தட்பவெப்ப நிலையில் இருக்கும். எந்த பூச்சி புழுவும் அண்டாது. தேவைப்படும் போது இதை தனியாக எடுத்து அப்படியே 10 மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து மூன்று நாட்கள் முட்டம் போட வைத்து அப்படியே நாற்றாங்காலில் தெளிக்க பயிர்கள் ஜம்மென்று பச்சையாய் சிரிக்கும்.
ஆனால் சணல் பைக்கு மாறி ப்ளாஸ்டிக் பைக்கு மாறி இன்று இன்னும் பல நவீன வசதிகளுடன் வந்து விட்டது. இன்று பச்சையாய் பயிர் சிரிக்கவில்லை. விவசாயிகளுக்குத் தான் பயிர் பலன் தருவதற்குள் இரத்தம் சிவப்பாய் வருகின்றது.
இந்தியாவிலிருந்து பிரிட்டனுக்கு சென்று கொண்டிருந்த செல்வம் அங்கே தொழிற்துறையை வெகு சீக்கிரமே முன்னேற்ற உதவியது. இந்தியாவுடன் வர்த்தகம் செய்து கொண்டிருந்த பிரிட்டன் தொழிலதிபர்களுக்கு கிடைத்த அபரிமிதமான லாபத்தைப் போலுள்ள உதாரணத்தை உலக பொருளாதார உறவுகளின் வரலாற்றிலேயே பார்க்க முடியாது. உலகத்தின் தொழிற்சாலையாக பிரிட்டன் மாறுவதற்கு இராபட் கிளைவ் உதவினார்.
அத்துடன் தனக்காக சேர்த்த சொத்துக்களும் கணக்கில் அடங்காது. நகையாக, பணமாக, பண்ணை வீடுகளாக என்று சேர்த்து குவித்தார். இதையே பிரிட்டன் நாடாளுமன்றத்தில் " இந்தியர்கள் தங்களுடைய பாதாள அறைகளிலிருந்த தங்கத்தையும் மாணிக்கங்களை எனக்கு முன்னால் குவியலாகக் கொட்ட அந்த குவியல்களுக்கிடைய நான் உலாவுவதுண்டு " என்று ஆணவமாக பேசினார்.
இதைத்தான் நேரு பின்வருமாறு எழுதினார்.
"அது பகற்கொள்ளையே. அவர்கள் "பண மரத்தை" ஆட்டினார்கள். பயங்கரமான பஞ்சங்கள் வங்காளத்தை அழிக்கும் வரை அந்த மரத்தை திரும்பத்திரும்ப ஆட்டினார்கள்."
ஏறக்குறைய இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னால் நடத்திக் காட்டிய இந்த அரசியல் அயோக்கியனுக்கும் இன்றைய அரசியல்வாதிகளுக்கும் என்ன பெரிதான வித்யாசம்?
அப்போதும் இப்போதும் எப்போதும் அரசியல் என்பது தந்திரம், சமார்த்தியம், சுயநலம் இந்த மூன்றையும் அடிப்படையாகக் கொண்டு தான் இயங்குகின்றது. அன்று நம்முடைய வளங்கள் பிரிட்டனுக்கு மட்டுமே சென்றது. இப்போது கருப்பு பணமாக பல நாட்டு வங்கிகளுக்கும் சென்று கொண்டுருக்கிறது.
தற்போது ஸ்விஸ் வங்கியில் மட்டும் இருக்கும் இந்தியர்களிள் பணம் 25 லட்சம் கோடி. மற்ற வங்கிக் கணக்குத் தொகை எத்தனையோ?. .
இந்தியக் கறுப்புப் பணத்தின் அளவு, இந்தியாவின் மொத்தக் கடன் தொகையிலும் அதிகம் என்கிறார்கள்.
தென்னிந்தியாவின் கதை தான் இப்படி என்றால் இந்தியாவின் அதிபர் மாளிகை எப்படி உருவானது?
1910 ஆம் ஆண்டு முதல் 1916 ஆண்டு வரைக்கும் பல்லாயிரக்கணக்கான இந்திய வேலையாட்களை, ஆங்கில கட்டிடக்கலை நிபுணர்களைக் கொண்டு அப்போது வைசிராயாக இருந்த ஹார்டிங் பிரபு தேர்ந்தெடுத்த இடம் எப்படிப்பட்டது தெரியுமா?
14 ஆம் நூற்றாண்டில் கொடூரமான தைமூர் போரில் கொல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கான இந்தியர்களின் மண்டை ஓடுகளைக் கொண்டு அந்த இடத்தில் ஒரு பிரமீடைக் கட்டியதாக சொல்லப்படுவதுண்டு. இந்த இடத்தில் மொகலாயச் சக்கரவர்த்திகள் சிவப்பு பாறைக் கற்களைக் கொண்டு தங்களுடைய ஆட்சிக்கு நினைவுச் சின்னங்களான செங்கோட்டை, ஜும்மா மசூதியையும் கட்டினார்கள். ஆனால் ஹார்டிங் பிரபுக்கு இது போன்ற வரலாற்று பின்புலம் பற்றி எதுவும் தெரியாமல் நிர்மாணித்த கட்டிடம் தான் இன்று வரைக்கும் இந்தியாவை ஆட்சி செய்ய உதவிக் கொண்டிருக்கின்றது.
சாம்ராஜ்யங்கள் சாம்பலாகிப் போவதும், மீண்டும் வேறொரு வகையில் உயிர்தெழுவதுமான இந்த நிகழ்வுகள் கால வரலாற்றில் வந்து போய்க் கொண்டேதான் இருக்கிறது.
வரலாற்றில் எத்தனையோ பேரரசுகள் வந்து போன சுவடே இல்லாமல் அழிந்தும் போய்விட்டது. பழங்காலத்தில் தோன்றிய வட ஆப்பிரிக்காவில் தோன்றிய பேரரசுகள், மத்திய கிழக்கு ஆசியா, பாரசீகம், கீரிஸ்,ரோம், சிலுவைப் போர்கள், கொலம்பஸ்க்கு பிறகு வந்த ஐரோப்பிய பேரரசுகள் போன்றவற்றின் ஏகாதிப்பத்திய வளர்ச்சியே பெரும்பாலான போர்களுக்கும், உலகில் பசி, பட்டினி, பஞ்சம் போன்றவை உருவாக காரணமாக இருந்தது.
பல்லாயிரக்கணக்கான மக்களின் கலாச்சாரம், பண்பாடுகளையும் காணாமல் போகவும் வைத்தது. உலகில் அமைதியற்ற சமூகங்களை உருவாக்கிய பேரரசுகள் தங்கள் நாடுகளில் அதிக அளவு போதைப் பழக்கத்தையும் மனோ ரீதியான பிரச்சனைகளும் உடைய நாகரிக மனிதர்களையும் தான் வளர்க்க முடிந்துள்ளது.
ஆனால் இன்று வரைக்கும் அமெரிக்கா தனது ஏகாபத்திய வாழ்க்கையை இழந்துவிட தயாராய் இல்லை என்பதை இங்கே குறிப்பிடலாம். பிரிட்டன் வரலாற்றை உற்றுக் கவனித்துப் பாருங்கள்.
எந்த இடத்திலும் ஒரு துளி கூட கருணை, காருண்யம், மனிதாபிமானம் என்பதை மருந்துக்குகூட பார்க்கமுடியாது. வெறிகொண்ட வேங்கை போலத்தான் வேட்டையாடி தங்களை வளர்த்துக் கொண்டே வந்துள்ளார்கள். ஆனால் அமெரிக்காவை ஆண்டவர்கள் இன்று அமெரிக்காவை அண்டிப் பிழைப்பவர்களாக மாறியுள்ளது காலத்தின் கோலம் தானே?
உலக வரலாற்று சரித்திரத்தில் எந்த பேரரசும் நீடித்து இருந்ததாக சரித்திரமே இல்லை. இன்று வியப்பை தந்து கொண்டிருக்கின்ற அமெரிக்காவின் நிலையும் இதுவே. எந்த நாடும், தனி மனிதனும் மற்றவர்களை சுரண்டி நீண்ட காலம் வாழ்ந்ததாக இல்லை.
ஆனால் இந்தியா கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாகவும் ஏராளமான பஞ்சம், பசி, பட்டினிகளைத் தாண்டி வந்தபோதிலும் இன்று வரையும் அடிப்படை கட்டுமானம் சிதையாமல் தானே இருக்கிறது? எப்படி?
இந்தியா இப்போது 40 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலையை விட உயர்ந்திருக்கிறது. உண்மை தான். முழுமையான கல்வியறிவு தேசம் என்று இல்லாவிட்டாலும் கூட நடுத்தர வர்க்கத்தின் மூளை அறிவு இன்று உலகம் முழுக்க மென்பொருள் துறை முதல் பல்வேறு துறைகளிலும் கொடி கட்டி பறக்கின்றது. இந்தியர்கள் உலகம் முழுக்க பரவ காரணமாகவும் இருக்கிறது.. இதை மற்றொரு வகையில் பார்க்கப் போனால் நவீன அடிமைகளை உருவாக்கி உலகம் முழுக்க அனுப்பிக் கொண்டிருக்கின்றோம்..
இந்தியர்களின் திறமையை உள்நாட்டில் பயன்படுத்த ஆளில்லாத காரணத்தால் எவர் வந்து நம்மை கொத்திக் கொண்டு போகமாட்டாரோ என்று ஏக்கத்தில் தான் ஒவ்வொரு துறையிலும் இருப்பவர்களும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
நிறுவன வர்க்கமும் அதிகார வர்க்கமும் உருவாக்கும் கூட்டணியின் மூலம் இந்த பரந்த உலகம் ஒரே கூரையின் கீழ் கொண்டு வரப்படுகின்றது. மேல்தட்டு மக்களை அவர்களின் வாழ்க்கையை விளம்பரங்களும், ஊடகங்களும் முன்னிறுத்துகின்றது. நடுத்தர வர்க்கத்தையம் அவ்வாறு ஒருவிதமான வாழ்க்கை வாழ் வேண்டிய அவசியத்தையும் உணர்த்துகிறது.
உலகமயமாக்கல், தராளமயமக்கல், பொருளாதார வளர்ச்சி என்பது ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் எல்லாவிதமான வசதிகளையும் பெறுவதும் பின்னால் உள்ளவர்களை சுரண்டலுக்கு உட்படுத்திக் கொண்டிருப்பதுமே ஆகும்.
இதன் காரணமாகவே எனக்கு என்ன லாபம்? என்ற பேராசை என்பது அடித்தட்டு மக்கள் முதல் அதிகாரவர்க்கம் வரைக்கும் ஊடுருவிப் போனதால் எவரிடம் சேவை மனப்பான்மையை எப்படி எதிர்பார்கக முடியும். மாற்றம் என்பது தனிமனிதனில் இருந்து தொடங்குவது என்பதையே நாம் உணராமல் மாற்றத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.
இங்கு மதம் முக்கியம். அதற்குள் பிரியும் ஜாதிக்கூறுகள் அதைவிட முக்கியம். பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரிபவராக இருந்தாலும் பள்ளர் எவரும் பறையரை திருமணம் செய்ய விரும்பதில்லை. செட்டியார் எவரும் நாடாரை நினைத்துப் பார்ப்பதில்லை. இதைவிட முக்கியம் அவரவரின் கடவுள் நம்பிக்கை.
இந்தியர்களின் பெரும்பாலனோருக்கு இருக்கும் மறுபிறவி நம்பிக்கை ஒன்று தான், நிகழ்கால அவலத்தை பொறுத்துக் கொள்ள வைக்கின்றது. விலங்குகள் போல நின்று கொண்டே மூத்திரம் போய்க்கொண்டிருக்கும் சந்தை கடந்து போய் தெரு முனையில் இருக்கும் கோவில் தரிசனத்தை பயபக்தியுடன் வணங்குவது நம்முடைய பண்பாடு..
ஒழுக்கத்தை விட நமக்கு பயமே முக்கியம். அந்த பயம் ஒவ்வொருவர் மனதிலும் இருந்து கொண்டேயிருப்பதால் இவ்வளவு பெரிய நாட்டை மிகக்குறைவான கண்காணிப்பு மூலம் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடிகின்றது. அவரவர் மத நம்பிக்கைகளின் காரணமாகவே மதத்தால், மொழியால், ஜாதியில், குணத்தால் பிரிந்து வாழும் இந்த அகண்ட தேசம் பலவீனமாகாமல் தொடர்ந்து சிறிதளவேனும் முன்னேறிக் கொண்டிருக்கிறது. ..
ஆங்கிலேயர்கள் ஆட்சிக்கு வந்த போது கூட பெரும்பாலன மக்கள் தங்கள் அன்றாட கடமைகளில் தான் கவனமாக இருந்தார்களே தவிர எவர் ஆட்சி செய்கிறார்கள் எவ்வளவு கொள்ளையடிக்கிறார்கள் என்பதைப் பற்றி எந்த அக்கறையும் இருக்கவில்லை. இப்போதும் அப்படித்தான் இருக்கிறார்கள். ஆனால் அன்று தங்கள் உழைப்பின் மூலம் வாழ்ந்து கொண்டிருந்த மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தார்கள். காந்தி அழைத்தவுடன் பாரபட்சம் இல்லாது சத்தியாகிரக போராட்டத்தில் பங்கெடுத்து சுதந்திர பொறியை பற்ற வைத்தார்கள்.
இப்போது தகுதியான தலைவர்கள் எவரும் இல்லாத போதும் அடிப்படை வாழ்வாதாரமே பாதிப்படைய போகின்றது என்றதும் கம்பம் பகுதியில் தன் எழுச்சியாக கேரளவுக்கு எதிர்ப்பை காட்டும் பட்சத்தில் ஒரு லட்ச மக்கள் திரண்டுள்ளார்கள்.
புரட்சி என்பது எப்போது உருவாகும்?.
இன்று வாழ்வாதாரம் பாதிக்கப்போகின்றது என்றதும் லட்சக்கணக்கில் திரளும் மக்கள், நாளை உணவுக்கே பஞ்சம் என்றால் எத்தனை கோடி பேர்கள் இது போன்ற புரட்சியில் இறங்கக்கூடும்?. மாற்றத்தை விரும்புவர்கள் அதிகமாகும் போது இது போன்ற தன்னெழுச்சியான நிகழ்வுகள் நடந்தே தீரும்.
நமது இந்தியாவை அதிக காலம் ஆண்டுள்ள காங்கிரஸ் வந்துள்ள பாதையில் இன்று நாடே திக்குத் தெரியாத பாதையில் போய்க் கொண்டிருக்கின்றது.
ஏன்?
1929 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு காந்திஜி நேருவை முன்மொழிந்தார். காந்தி தனக்குப் பதிலாக அந்த பதவிக்கு மிக பொருத்தமானவர் நேரு என்றே தீர்மானமாக நம்பினார். சர்தார் வல்லபாய் படேல், மௌலானா அபுல் கலாம் ஆசாத் மற்றும் வேறு சில செல்வாக்குள் காங்கிரஸ்கார்களுக்கு மிகுந்த ஏமாற்றமாக இருந்தது. மூர்க்கத்தனமான போட்டி பொறாமைகளுக்கிடையே நேரு கூட இந்த பதவியை விரும்பவில்லை. காரணம் காங்கிரஸ் கட்சியில் கூட பிரிட்டிஷ் அரசாங்கத்தோடு ஒத்து ஊதி காலத்தை ஓட்டிவிடலாம் என்ற மாற்றத்தை விரும்பாதவர்கள் என்ற ஆதிக்கமும் சரிக்கு சரியாக இருந்தது.
இதன் காரணமாகவே காங்கிரஸ் செயற்குழு தலைவராக இருந்த சி.ஆர். தாஸ் பதவி விலகினார். ஆனால் இன்று வரையிலும் இந்தியாவிற்கு மாற்றம் வேண்டும் என்ற எண்ணிக்கை கொண்ட ஆட்சியாளர்கள் அதிகமாகத்தான் இருக்கிறார்கள். ஆனால் இவர்களின் அத்தனை நோக்கமும் ஏதோவொரு நாட்டின் மூலம் இந்த மாற்றம் இருக்க வேண்டும் என்று எண்ணத்தில் முடிவது தான் நாட்டின் பிரச்சனையின் தொடக்கமாக இருக்கிறது. இப்போது மன்மோகன் சிங் நம்பும் அமெரிக்கா உலகத்திற்கு சொல்ல விரும்பு செய்தியை ஒரே ஒரு உதாரணம் மூலம் நம்மால் சொல்லிவிட முடியும்.
அமெரிக்கா சமீபத்தில் ஈராக்கில் போர் நடத்த 87 பில்லியன் அமெரிக்கன் டாலர் செலவழித்தது. ஆனால் உலகமக்கள் அணைவருக்கும் சுத்தமான நீரும், போதுமான உணவும் மற்ற அடிப்படை வசதிகளும் கல்வியும் அளிக்க இதில் பாதித் தொகையே தேவைப்படும் என்று ஐ.நா சபை மதிப்பிட்டுள்ளது. அமெரிக்கா இந்தியாவின் மேல் வைத்துள்ள கழுகுப்பார்வை என்பது இன்று நேற்றல்ல. சுதந்திரம் பெற்று முதல் பிரதமராக இருந்த நேரு காலத்தில் இருந்தே  நடைபெறுகின்றது.
உலோகத் தொழில், மின்சார சக்தி உற்பத்தி, இரசாயனம், இயந்திரங்களைக் கட்டுதல், போக்குவரத்து, சுரங்கத் தொழில் போன்ற துறைகளை வளர்க்கப்பட வேண்டும் என்று நேரு கொண்டு வந்த ஐந்தாண்டு திட்டத்தைப் பார்த்து அப்போது டில்லியில் அமெரிக்க தூதராக இருந்த ஹென்ரி ஜே. கிரேடி சொன்ன வார்த்தை என்ன தெரியுமா?
"இந்தியாவை தொழில் வளர்ச்சியடைந்த நாடாக மாற்ற முயற்சிப்பது அதன் பொருளாதார வளர்ச்சியின் "இயற்கையான போக்கை" அழிப்பதில் கொண்டு போய்விடும்" என்று பயமுறுத்தினார். மேலும் நேரு ஒரு மறைமுக கம்யூனிஸ்ட் என்று தூற்றினார்.
இவ்வாறு சொன்ன அமெரிக்கா நேருவை தங்கள் ப்க்கம் கொண்டு வந்தே ஆக வேண்டும் என்று பலவித முயற்சிகளையும் செய்து பார்த்து 1948 ஆம் ஆண்டே அமெரிக்கா வரச்சொல்லி அவருக்கு அழைப்பு விடுத்தது. காலம் கடத்தி ஆனால் உறுதியான நிலைப்பாட்டுடன் அமெரிக்க சென்ற போது (1949 அக்டோபர்) வாஷிங்டன் விமான நிலையத்தில் நேருவை வரவேற்ற அதிபர் ட்ரூமன் பின்வருமாறு கூறினார்.
" உங்கள் நாட்டுக்குப் புதிய பாதையைக் கண்டுபிடிக்கப் புறப்பட்டவர்கள் எங்கள் நாட்டைக் கண்டுபிடிக்க வேண்டுமென்பது விதியின் முடிவாக இருந்தது. உங்கள் வருகை ஒரு அர்த்தத்தில் அமெரிக்காவைக் கண்டுபிடிப்பதாக இருக்குமென்று நம்புகின்றேன்."
ஆனால் அமெரிக்கா எதிர்பார்த்த எதுவும் நடக்கவில்லை.
இந்திய சுதந்திரத்தில் எந்த வித கட்டுப்பாடுகளையும் விதிக்க அமெரிக்காவுக்கு எந்த யோக்கியதையும் இல்லை என்று வெற்றி நடை போட்டு இந்தியர்களை நம்பி இந்தியாவை வடிவமைக்கத் தொடங்கினர். ஆனால் அன்று நேரு காங்கிரஸ் தொடங்கிய பயணம் இன்று இத்தாலி காங்கிரஸ் ஆக மாறி, மறுபடியம் அதே அமெரிக்காவின் காலடியின் சமர்ப்பிப்பதில் முடிந்துள்ளது.
இதைத்தான் வாழ்க்கை என்பது ஒரு வட்டம் என்று சொல்கிறார்களோ?....
இங்கே எடுத்து நோக்கப்பட்ட விடயங்கள் எண்ணத்தில், சிந்தனையில், ஏற்றப்பட்டால் இந்தியர்கள் எல்லோர்க்கும் வாழ்வு .
இல்லையேல்.......?
தொடர் பயணத்தில் பங்கெடுத்த உங்கள் அணைவருக்கும் என் நன்றி.
-4தமிழ்மீடியாவிற்காக:ஜோதிஜி திருப்பூர்.
இந்தியப் பிரதமர் விவசாயிகள் தினமெனப் பிரகடணம் செய்திருக்கும் டிசம்பர் 23ல் இந்த நெடுந் தொடர்கட்டுரை நிறைவுறுகின்ற போதும் இது ஒரு முடிவல்ல..
இவ்வாறான ஒரு தொடர்  ஒரு இணைய ஊடகத்தில் வெளிவருவதனால் எவ்விதமான சாதகங்களைத் தோற்றுவிக்க முடியும் என்ற கேள்வி எழுவது நியாயமானதே.  இத் தொடரை எழுதிய கட்டுரையாளர் ஜோதிஜியிடமும், எங்களிடமும்  கூட இந்தக் கேள்வி இருந்தது.
பாதிக்கப்படும் விவசாயிகளில் பலரும் பாமர மக்கள். அவர்களுக்கு இணைய வாசிப்போ இது போன்ற விடயங்களோ சென்றடைந்துவிடுமா..? என்ற  கேள்விக்கு இல்லையென்பதே மிகத் தெளிவான பதிலாக இருக்க முடியும்.
அப்படியானால் யாருக்காக இந்த முயற்சிகள்..?
சந்தேகமில்லை. இந்த முயற்சிகள் இணையப் பாவனையில் உள்ள நடுத்தர மற்றும் படித்தவர்கள் அறிந்து கொள்ள வேண்டுமென்பதற்காகவே.
ஏகாதிபத்திய சாம்ராஜ்யங்கள் இன்று இந்த நடுத்தரவர்க்கத்தையே குறிவைத்துக் காய் நகர்த்துகின்றன. தாம் சுரண்டப்படுவது தெரியாமலே  நம்பிக்கை மோசம் போய்க் கொண்டிருக்கிறது இந்த நடுத்தர வர்க்கம்.
வெள்ளந்திகளான பாமார மக்கள் பாதிப்புத் தமக்கென உணரும் போது, உணர்வோடு போராடப் புறப்பட்டுவிடுகின்றார்கள். அவ்வாறு புறப்படுபவர்களை ஆட்சியாளர்கள் தீவிரவாதிகளாகவோ, அல்லது வேண்டத்தகாதவர்களாகவோ உருமாற்றிக் காட்டும் போது, அதையே  உண்மையென உச்சுக் கொட்டி ஏற்றுக் கொள்ளும் ஏமாளிகளாக அல்லது எதிர்ப்பதற்கு இயலாதவர்களாக இருப்பவர்கள் இந்த நடுத்தர வர்க்கத்தினர்.
வழங்கப்படும் ஏட்டறிவு, வேலைவாய்ப்பு, அதற்கும் மேலான பொழுது போக்குச் சுவாரசியங்கள் எல்லாமே, இதற்கெனத் திட்டமிட்ட வகையிலேயே காப்ரேட் கடவுளர்களால்  படைக்கப்பட்டு, இரட்சிக்கப்படுகிறது நடுத்தரவர்க்கம். அதனால்தான் இவ்வாறான சிந்தனைகள் இணையவழியில் அவர்களிடத்தில் பகிரப்பட வேண்டும், படிக்கப்பட வேண்டும் என்பதை விரும்புகின்றோம்.
எல்லைகள் தாண்டிப் பயணிக்கும் இணையவழியில் இவ்வாறான செய்திகள் எண்ணற்ற பேர்களைச் சென்றடைய வேண்டுமென்பதே எங்கள் விருப்பம். அந்த விருப்பத்தின்படி ஆயிரக்கணக்கான பேர்களை இந்தத் தொடர் சென்றடைந்திருக்கின்றது. அதற்கப்பால் சில முக்கிய நிலைகளிலும் முட்டி மோதியிருக்கிறது என்பதையும் அறிவோம். ஆனால் உள்வாங்கி உணர்ந்து கொண்டோர் ஓராயிரம் பேர்களல்ல ஒரு நூறு பேராக இருந்தாலும், அதுவே  ஆரம்பம்....!
கட்டுரையாளர் ஜோதிஜிக்கும், வாசிப்பில் தொடரும் வாசக உறவுகளுக்குமான இனிய நன்றிகளுடன்
- 4தமிழ்மீடியா குழுமம்

காக்க..காக்க. நோக்க..நோக்க பகுதி 9

கருத்துகள் இல்லை: