செவ்வாய், பிப்ரவரி 28, 2012

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

பள்ளிக்குழந்தைகளுக்கு கட்டாய "ஓவர்டைம்" ! தொழிற்சாலைகளுக்கு கட்டாய "மின் விடுமுறை" - பிரமாதம்!

இந்தக்கட்டுரை ஒரு திமுக ஆதரவு கட்டுரை கிடையாது. கிடையவே கிடையாது. ஒரு சாதாரண இரு நிகழ்வுகள். நடந்த மற்றும் நடந்து கொண்டிருக்கும் இரு நிகழ்வுகள். இதில் என் கேள்வி நடுநிலைவாதிகளை நோக்கித்தான். நேரிடையாக பாதிக்கப்படாமல் இருப்பவர்களுக்கு இக்கட்டுரை அயற்சியை தரலாம். அதனால் கட்டுரையின் கடைசி பாராவுக்கு நேரிடையாக போய் படித்து விட்டு போகவும்.

2011ம் ஆண்டு மே 13ம் தேதி முதல் இந்த அதிமுக அரசு ஆட்சிக்கு வந்தது. சுமார் பத்து மாதம் முன்பு. ஆட்சிக்கு வந்து ஒரு பதினைந்து தினத்தில் பள்ளிகள் திறக்க இருந்தன. புதிய பாடங்கள். நிபுனர் குழுவினரை வைத்து நான்கு ஆண்டுகள் பல வித ஆராய்சிகளுக்கு பின்னர் தயாரிக்கப்பட்ட சமச்சீர் கல்வி பாடத்திட்டங்கள். புத்தகங்கள் எல்லாம் தயார். ஆனால் ஆட்சிக்கட்டிலில் ஏறிய அதிமுக அடுத்த ஓரிரு நாட்களில் ஒரு அறிவிப்பை வெளியிடுகின்றது. சமச்சீர் பாடத்திட்டம் கிடையாது. பழைய பாடத்திட்டம் தான். அச்சடிக்கப்பட்ட பாடப்புத்தகங்கள் எல்லாம் கிடையாது. புதிதாக புத்தகங்கள் அச்சடிக்கப்படும். அது அச்சடித்து வெளிவரும் வரை பள்ளி திறக்கப்படாது என ஒரு அறிவிப்பு செய்கின்றது.

பெற்றவர்கள் தலையில் இடி. அதுவும் பத்தாவது மாணவர்களுக்கு பேரிடி. ஏனனில் பத்தாம் வகுப்பு என்பது அவனுக்கு வாழ்க்கையின் திருப்பு முனை நேரம். ஏற்கனவே இருந்த அரசு இணையத்தில் அந்த சமச்சீர் பாடங்கள் எல்லாம் வெளியிட அதை தரவிறக்கம் செய்து வசதி படைத்த மாணவர்கள் படிக்க ஆரம்பித்து விட்ட நிலையில் இப்படி ஒரு அரசு ஆணை எல்லோரையும் செயலிழக்க செய்கின்றது.ஆயிற்று... உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் எல்லாம் அரசின் செயலை கண்டித்தது. தண்டித்தது. சமச்சீர் கல்விக்கு ஆதரவாய் நீதி வழங்கியது. அதல்லாம் பழைய கதை. இதில் விஷயம் என்னவெனில் அதற்குள் இரண்டு மாதங்கள் ஆகிவிடுகின்றது. கிட்டதட்ட ஒரு மாதம் கழித்து திறந்த பள்ளிகள் எல்லாம் பாடப்புத்தகம் எது என தெரியாமல் செய்வதறியாமல் நிற்க... ஒரு வழியாக சமச்சீர் பாடப்புத்தகங்களே கொடுக்கப்பட வேண்டும் என தீர்ப்பு வழங்கப்பட குறிப்பிட்ட சில நாட்கள் குறித்து அந்த நாட்களுக்குள் புத்தகங்கள் மாணவர்களுக்கு வினியோகம் செய்து விட வேண்டும் என சொல்லப்பட ஆனால் அதுவும் அரசால் செய்யப்படவில்லை.

அடித்து வைத்த புத்தகங்களை முழுமையாக மாணவர்களுக்கு வினியோகித்து முடித்த போது செப்டம்பர் மாதம் கிட்ட தட்ட முடிந்தே விட்டது. மொத்தம் மூன்று மாதங்கள் யாருக்கும் பிரயோசனம் இல்லாமல் வெட்டியாக போனது. நேரிடையாக அரையாண்டு தேர்வுக்கு போகிறார்கள் மாணவர்கள். பாடம் நடத்தக்கூட ஆசிரியர்களுக்கு காலம் போதவில்லை. சரி பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி இறுதி தேர்வாவது தள்ளிப்போகும் என நினைத்த பெற்றோர்களுக்கும், மாணவர்களுக்கும் அதற்கும் மேல் ஆசிரியர்களுக்கும் பேரதிர்ச்சி. எல்லா வருடம் போல இந்த வருடமும் அதே மார்ச் மாதம் பள்ளி இறுதித்தேர்வு என அட்டவணை வெளியாகிவிட்டது.

பொதுவாகவே மாணவர்கள் சனி, ஞாயிறு இரு நாட்கள் விடுமுறைக்கு பின்னர் திங்கள் கிழமை பள்ளிக்கு போவதற்கே கொஞ்சம் மன உளைச்சலில் தான் போவர். இது உண்மையோ உண்மை. வாரம் இரு நாட்கள் விடுமுறை கொடுத்தாலே இப்படியான ஒரு மனோநிலையில் இருக்கும் பெரும்பாலான மாணவ மாணவியர்கள் இப்போது இந்த கல்வியாண்டில் முதல் மூன்று மாதங்கள் அரசு செய்த குழப்பத்தால் பாடங்கள் இல்லாமையால் ஆசிரியர்களால் சனிக்கிழமை கண்டிப்பாக பள்ளி உண்டு, ஞாயிறு சிறப்பு வகுப்பு உண்டு என பள்ளிக்கு வரவழைக்கப்பட்டதால் ... ஆசிரியர்களுக்கும் வேறு வழி இல்லை, அதே போல பெற்றோர்களுக்கும் வேறு வழியே இல்லை... மாணவர்கள் போய் தான் ஆக வேண்டும். அப்படி போவதால் அவனுக்கு விளையாட போக முடியாது, ஒரு திருமணம், ஒரு கோவில், ஒரு கண்காட்சி, ஒரு குடும்பவிழா என எதிலும் தன் கவனத்தை திசை திருப்ப இயலாத ஒரு சூழல். மிகுந்த மன உளைச்சல் காரணமாக ஆசிரியரை கழுத்தில் கத்தியால் குத்தும் நிலைக்கு அவன் தள்ளப்படுகிறான்..... விடுமுறை கொடுத்து, விளையாட சொல்லி, பொழுது போக்காக அவன் மனதை மாற்றி மாற்றி அவனை படிப்பில் ஈடுபட செய்யாமல் தன் சொந்த ஈகோவின் காரணமாக இந்த அரசு செயல்பட்ட விதம் ஒரு மாணவ சமுதாயத்தையே ஒரு படுகுழியில் தள்ளியதை பார்த்தோம். பார்த்து கொண்டு இருக்கின்றோம். விடுமுறையே உனக்கு கிடையாது என குழந்தைகளை மன உளைச்சலுக்கு தள்ளியது இந்த அரசு என்பது ஒருபுறம் இருக்கட்டும்....

நிற்க...

நேற்று முதல் ஒரு புதிய அறிவிப்பு இந்த அரசால் வெளியிடப்பட்டுள்ளது. அதன் பெயர் சற்றே வினோதம். ஆமாம் "தொழிற்சாலைகளுக்கு மின்விடுமுறை". என்ன கொடுமை இதல்லாம். சிறு மற்றும் குறுந்தொழில் நிறுவனங்கள் மற்றும் பெரிய தொழிற்சாலைகள் ஆகியவற்றுக்கு வாரம் ஒரு நாள் "மின்விடுமுறை" என அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் இருக்கும் குடும்பத்தலைவர்களில் நாற்பது சதம் பேர் ஏதாவது ஒரு தொழிற்சாலையில் பணிபுரிபவர்கள் மட்டுமே. அவர்களுக்கு வாரம் ஒரு நாள் விடுமுறை என்பது தவிர இன்னும் ஒரு நாள் அரசு இப்போது அளித்துள்ள "மின்விடுமுறை" ஒரு முழு நாள். தனக்கு நியாயமாக கிடைக்கும் ஒரு நாள் விடுமுறையில் கூட ஓவர் டைம் செய்து அதன் வருமானத்தை குடும்பத்துக்கு செலவு செய்த அந்த தொழிலாளி இப்போது அதுவும் முடியாமல், அதை தவிர கூடுதலாக இன்னும் ஒரு நாள் வாரத்தில் கட்டாய விடுமுறைக்கு தள்ளப்படுகிறான்.

நன்றாக நினைத்துப்பாருங்கள். ஏற்கனவே சிறு மற்றும் குறுந்தொழில் செய்யும் முதலாளிகள் அரசின் மின்வெட்டால் நிலைகுலைந்து போயிருக்கும் நிலையில் அந்த தொழிலாளி வேலை செய்யாத அரசு அறிவித்த "மின்விடுமுறை"க்கு சம்பளமா கொடுக்கப்போகின்றனர்? ஆக வேலையில் இருக்கும் ஒரு தொழிலாளி மாதம் நான்கு நாட்கள் வேலையில்லாமல் மன உளைச்சலுக்கு ஆளாகப்போகிறான். ஏற்கனவே ஏறிவிட்ட விலைவாசியால் குறிப்பாக பால்விலை, பேருந்துகட்டணம் இதோ அடுத்த மாதம் ஏறப்போகும் மின்சாரக்கட்டணம் என வரிசையாக அவன் கழுத்தில் விழுந்து அழுத்தும் தூக்கு கயிற்றை சமாளிக்க அவனோ "ஓவர் டைம்" செய்து சமாளிக்கலாம் என இருந்த இந்த நேரத்தில் இருக்கும் வேலைக்கே உலை வைத்து கட்டாய விடுமுறை கொடுத்தால் அவன் இந்த உலகில் வாழ்வதா? அல்லது சாவதா? அதிலும் தொழிற்சாலைக்கு இன்று அரசின் மின்வாரியத்தால் நோட்டீஸ் கொடுக்கப்பட்டு விட்டது. என்ன தெரியுமா? வாரம் ஒரு நாள் உங்களுக்கான விடுமுறையில் கண்டிப்பாக விடுமுறை அளித்தே தீர வேண்டும். அதே போல இன்னும் ஒரு நாள் அரசு வழங்கும் "மின்விடுமுறையும்" கண்டிப்பாக நிறைவேற்றியே ஆக வேண்டும். உங்கள் தொழிற்சாலையில் 100 ஹெச் பி மோட்டார் இருந்தால் அந்த "மின்விடுமுறை நாளில்" பத்து சதம் மட்டுமே பயன் படுத்த வேண்டும். (அதாவது மோட்டார் இயக்காமல் சும்மா லைட், ஃபேன் , டிவின்னு போட்டு கிட்டு உட்காந்து இருக்கலாம்) அதை மீறி இயக்கினால் அபராதம் மற்றும் இரண்டு நாட்கள் முழு மின்வெட்டு (இது முதல் முறைக்கான அபராதம்) அடுத்த முறை கண்டுபிடிக்கப்பட்டால் இன்னும் அதிகம்... இப்படியாக....

ஒரு நூறு ஹெச் பி இருக்கும் தொழிற்சாலைக்கு ஒரு நாளைக்கு ஆகும் "உற்பத்தி" மதிப்பு சராசரியாக பத்து லட்சம் ரூபாய் எனில் அதற்கு வரியாக 5 சதம் முதல் 14.5 சதம் வரை அரசுக்கு வரும். இது ஒரு சிறுதொழில் நிறுவனத்துக்கான மதிப்பீடு மட்டுமே. ஒட்டு மொத்தமாக நமது அரசுக்கு ஏற்படும் நஷ்டம் என கணக்கிட்டு பிரம்மித்து கொள்ளுங்கள்.

ஆக விடுமுறை கொடுக்கப்பட வேண்டிய மாணவர்களுக்கு கட்டாய ஓவர் டைம். ஓவர் டைம் கொடுக்கப்பட வேண்டிய தொழிற்சாலைக்கு கட்டாய விடுமுறை.... ஒ இதற்கு பெயர் தான் "புரட்சி"யோ????
THANKS:
 http://abiappa.blogspot.in/2012/02/blog-post_26.html

கருத்துகள் இல்லை: